பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவதார மஹிமையும் வம்ச சரிதமும்

சரிதம் - 2

கு.ரா.

தீக்ஷிதரின் புகழினைக் கேட்டறிந்த பட்டோஜி தீக்ஷிதர் என்ற வியாகர்ண பண்டிதர் காசியிலிருந்து அடையப்பலம் வந்து சேர்ந்தார். நாடே போற்றும் ஸ்ரீமத் அப்பய தீக்ஷிதர் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

பட்டோஜி தீக்ஷிதர் (ஸித்தாந்த கௌமுதி எழுதிய வியாக்ரணப் பண்டிதர்), திண்ணையில் வீற்றிருந்த பிராமணரைப் பார்த்து "அப்பய்ய தீக்ஷிதர் எங்கே இருக்கிறார்" என்று கேட்டார். சாதாரண பிரமாணன் போன்ற உடையிலிருந்த தீக்ஷிதர் "நான்தான் நீங்கள் காணவந்த அப்பயா" என்று பதில் கூற, பட்டோஜி தீக்ஷிதர், இந்த பிராமணர் ஏதோ பரிஹாசம் செய்கிறார் போல உள்ளது. ஏனெனில், பிரக்யாதி பெற்ற அப்பய தீக்ஷிதர் ஆடம்பர உடையில் அல்லவா இருப்பார். இவர் ஏதோ கேலிசெய்கிறார் என்று நினைத்து "'பரிமளம்' இயற்றிய பெரியவரைப் பார்ப்பதற்கு நான் வந்துள்ளேன்" என்றார்.

ஸ்ரீ தீக்ஷிதர் புன்சிரிப்புடன் "மீண்டும் சொல்கிறேன், நான்தான் நீங்கள் பார்க்க விரும்பும் அந்த அப்பய்ய தீக்ஷிதர்" என்று கூறி, ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைக் கூறினார். அதன் அர்த்தமாவது "வெளி வேஷத்தை மதிக்க வேண்டாம்" சாஸ்திரங்களில் போற்றப்படும் பரமேஸ்வரனுக்கு இடுப்பில் துணியே கிடையாது. ஆனால், அவன் 'சர்வக்ஞன்' என்றார்.

பட்டோஜி உடனே புரிந்துகொண்டு, தீக்ஷிதரின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தார். தன்னை சிஷ்யராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார். சில ஆண்டுகள் ஸ்ரீமத் தீக்ஷிதருடன் தங்கி ஸ்ரீ தீக்ஷிதர் எழுதியுள்ள படைப்புகளான கிரந்தங்களை முக்கியமாக தீக்ஷிதரின் 'மிமாம்ஸ' கிரந்தங்களை பட்டோஜி தீக்ஷிதர், வடதேசத்திற்குச் சென்று, ஸ்ரீமத் அப்பய தீக்ஷிதரின் சம்ஸ்கிருத, கிரந்தப் படைப்புகளை வெகுவாகப் பரப்பவும் செய்தார். ஆதி சங்கரருக்கு இணையாகவே ஸ்ரீ தீக்ஷிதரின் புகழ் வெகுவாகப் பரவியது.

(இத்தருணத்தில் நாம் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். அப்பய்ய தீக்ஷிதரின் பிதா ஸ்ரீரங்கராஜன் பெயர் காரணம் என்னவென்று ஆராய்வோமானால் ஒன்று எளிதில் புலப்படுகிறது. அதாவது சிவ, வைஷ்ணவ பேதமற்ற பிறப்பின் மேன்மையை அறியலாம்.)

"விஜய நகர ராஜாவான கிருஷ்ண தேவராயரின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் ஆச்சார்ய தீக்ஷிதர். இவர் அத்வைதியானாலும் விசிஷ்டாவைதிகளையும் சமமாகவே பார்ப்பவர். விஜய நகர ராஜாவினால் "வக்ஷஸ்தல சாரியார்" என்ற விருதினையும் பெற்றவர். இவருக்கு இரு மனைவிமார்கள் உண்டு, ஒவ்வொருவருக்கும் நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள்.

இரு மனைவிகளில் ஒருவர் வைஷ்ணவரான ஸ்ரீ வைகுண்டாச்சாரியாரின் புதல்வி. ஆகவே, வக்ஷஸ்தலசாரியாரின் மூத்த குமாரனாகப் பிறந்த ஸ்ரீ ரங்கராஜாத்வரி (அப்பய்ய தீக்ஷிதரின் பிதா) தனது பாட்டனராகிய ஸ்ரீ வைகுண்டாச் சாரியாரால் நாமகரணம் செய்யப்பட்டு, ரங்கராஜாத்வரி என்றே அழைக்கப்படலானார். அக்காலத்தில் ஸ்மார்த்த - வைஷ்ணவ பேதங்கள் இல்லாமல் இருந்தது எனலாம்.

அடையப்பலத்தில், ஸ்ரீமத் தீக்ஷிதர் அத்வைத மதக் கோட்பாடுகளின்படி ஆசார அனுஷ்டானங்களைச் செய்துகொண்டு வரும் சமயம், தனது கிரஹஸ்த்ர தர்மத்தை யும் துணைவியார் மங்களாம்பிகையுடன் எளிய முறையில் செவ்வனே பின்பற்றி வந்தார்.

நாடெங்கும் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் புகழ் பரவியது. அவரது இல்லத்தில், சமஸ்கிருத வித்வான்களும் தவ சிரேஷ்டர்களும், அவ்வப்போது வந்து தங்கி, அவரது பிரவசனங்களை நேரில் கேட்டு, ஆனந்தம் அடைந்து வந்தனர்.

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர், நாம் முன்னே குறிப்பிட்டபடி அரசர்களாலும் பிரபுக்களாலும் தமக்குச் சன்மானமாக வழங்கப்பட்ட விலையுயர்ந்த தங்க ஆபரணங்களையும் பொருள்களையும், ஓர் இம்மியளவுகூட தனக்கென்று எடுத்துக்கொள்ளாது தான தருமங்களையே செய்து வந்தார். பற்பல யாகங்கள் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

வேதங்களை நன்கு அறிந்து பாண்டித்யங்களைப் பெற்ற சிவபக்தர்களைக் கொண்டு, யாகங்கள் செய்ய முற்படலானார்.

ஆசார சீலரான ஸ்ரீமத் தீஷிதரின் யாகங்களைக் கேள்விப்பட்ட அரசர்கள், பிரபுக்கள், பக்தி மேலிட வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமத் தீக்ஷிதர் செய்துவந்த யாகங்கள்

ஸ்ரீ தீக்ஷிரேந்திரர் தனது யவ்வன வயதிலேயே அடையப்பலத்தில் தங்கியிருந்தபோது "ஸோமயாகம்" செய்தார். பக்த கோடிகளும், மற்றவர்களும் தீக்ஷிதர்கள் செய்யும் யாகத்தில் திரளாகக் கலந்து கொண்டு சாக்ஷாத் பரமேஷ்வரனே யாகம் செய்வது போலப் பரவச நிலை பெற்று, போற்றி வணங்கி ஆசி பெற்றார்கள். அச்சமயம் வேலூரை ஆண்ட சின்ன பொம்மன் அரசனிடம் ஆஸ்தான வித்வானாக இருந்த 'தாதாசாரியார்' என்பவர், தீக்ஷிதருக்கு எதிராக நிந்தித்துப் பேசினார். சின்ன பொம்மனிடமும் கோள் செய்வதும் மன்னரது மனதைத் திருப்பவும் முயன்றார். ஆனால் இதைப் பற்றி தீக்ஷிரேந்திரர் ஒரு சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. என்னே அவரது சாந்த குணம்!

வாஜபேயம்-யாகம்

ஸ்ரீமத் தீக்ஷிதர் 'வாஜபேயம்' என்ற மஹாயாகத்தை, காஞ்சிபுரத்தில் நடத்தும்போது பக்த கோடிகள் நாடெங்கிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.

மஹரிஷி வசிஷ்டருக்கு ஒப்ப, ஸ்ரீமத் தீக்ஷிதர் யாகங்களைக் கிரமப்படி செய்யலானார். இந்த வாஜபேயம் யாகத்தில் பதினேழு ஆடுகள் பரமேஸ்வரனுக்கு யாகத் தீயில் அர்ப்பணிக்கவும் தயாராகக் கொண்டுவரப்பட்டிருந்தன. அவை அவ்வமயம் உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்டு ஸ்ரீ தீக்ஷிதர் கலக்கமடைந்து அவை உயிரிழக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டவே, சிவ பெருமானைத் தியானித்து தனது ஸ்லோகத்தில்

"யா ப்ரஹ்மணோ நிச்வஸிதம் யதுக்தி:
ஸத்யாநிசம் யஜ்ஜபதோ விமுக்தி: |

ஸைவ ப்ரமாணம் நநு மாத்ருசாநாம்
ச்ருதே நமஸ்தே பவதீ கதிர்ந: ||

விஹிதம் விபரீதமேதக: ஸ்யாத் ததபி
ஸ்யாத்குஹசிச்ச ஸாதுகர்ம |

கஹநாம் கதிமஸ்ய கர்மணோ(அ)பி
ச்ருதிபாவம் ச ந வித்மஹே மஹேச||"

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பரமேஸ்வரனைப் பார்த்துப் பதினேழு ஆடுகள் யாகத்தின் பலிபீடத்தில் சர்வேஸ்வரனுக்கு அக்னியில் அர்ப்பணம் செய்யவிருந்ததைக் கண்டவர்கள் "இஃதென்ன, இந்த பிராமணர்கள் ஆடுகளைப் பலியிடுகிறார்களே! என்று விமர்சித்து துக்கமடைந்தார்கள்.

(தொடரும்)

Sparks ஸ்ரீமத் பாகவதம்



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants