பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       BT56 Brahmin Today - October 2008   பிராமின் டுடே - அக்டோபர் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites





எளிமையான வாழ்க்கையும் உயரிய சிந்தனைகளும்

பாகீரதி இராமனாதன்

பிராமணர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். ஆடம்பரம் பிராமணனுக்குத் தேவையற்ற விஷயமாகும். பிராமணன் தனது வாழ்வினைச் சரியான பாதையில் செலுத்துவதற்கும், அறிவின் ஒளியைப் பெறுவதற்கும், எளிமையான வாழ்க்கையே தேவைப்படுகிறது.

எளிமையாக வாழ்வதால் நாம் பல பிரச்சினைகளைச் சந்திப்பதில்லை. பிராமணன் தனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் எளிமையைக் கடைபிடிக்க வேண்டும். எளிமையாக வாழ்வதால் ஒரு கேவலமும் இல்லை.

பிராமணன், தனது ஆன்மீக வாழ்வில் முன்னேறிச்செல்ல இந்த எளிமை உறுதுணையாக நிற்கிறது. ஒருவன், தனது வாழ்வில் பெயர், புகழ், செல்வம், மேலும் மேலும் செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் செயல்படும் போது, இந்தப் பொருளியல் உலக வளங்கள் மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றன. உலகில் உள்ள போதை வஸ்துகளில் மிகவும் மோசமானது எது தெரியுமா? கொடூர மனப்பான்மையும், பொருளியல் விருப்பங்களுக்காகப் பிறரை வருத்துவதும் ஆகும். செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற போதை நம் கண்களைக் கட்டிப்போட்டு விடுகின்றது.

உண்மையில், ஒருவர் தனது செல்வத்தைப் பற்றி, பிறருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில், அவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைப்பதில்லை. மாறாக, அவர் தனது செயலால் பிறர் மனத்தில் பொறாமையை தூண்டிவிடுகிறார். வெறுப்பினைச் சம்பாதித்துக்கொள்கிறார் அல்லது சந்தேகத்தை பிறர் மனத்தில் தோற்றுவித்துவிடுகிறார். இப்படிப்பட்ட மனநிலையை ஏற்படுத்தும் நபரிடம் யாரும் மனப்பூர்வமான நட்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை.

ஆடம்பரமாக உணவு உண்பதிலோ நிகழ்சிகளை நடத்தி மகிழ்வதிலோ அல்லது ஊதாரித்தனமாக செலவு செய்வதிவோ உண்மையான மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

தன்னைச் சுற்றிப் பசியுடன் பலர் வாடிக்கொண்டிருக்கும்போது, ஆடம்பரமாக உணவு உண்டு மகிழ்வது பிராமணனுக்கு அழகு அல்ல.

இப்படி ஆணவத்தை வெளிப்படுத்தும் செயல்களாலும் ஆடம்பர ஊதாரித்தனமான வாழ்க்கையினாலும் மனிதர்கள், பல்வேறு விதமான தீமைகள், திருட்டு மற்றும் கொலைத் தாக்குதலுக்கும் ஆளாகிவிடுகின்றனர். இதற்குப் பிராமணர்களும் விதிவிலக்கு அல்ல.

எளிமையான வாழ்க்கையும் உயரிய சிந்தனைகளும் என்ற பொன்னான கொள்கையைக் கடைபிடிப்பதால், நமது பொருளாதார வாழ்வில் சிக்கல்களைத் தவிர்க்கலாம். இந்த எளிய கருத்துகளை பின்பற்றி நடக்கும் பிராமணர்களின் வாழ்வில் உண்மையான வெற்றியும் தன்மானம், சுய கௌரவம் முதலியனவும் அடங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எளிமையாக வாழ்வது என்றால் என்ன? இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் பொருள்களைப் பயன்படுத்தி வாழ்வதும் எளிமையான நடைமுறை வாழ்க்கையுமாகும். ஆடம்பரமான, ஊதாரித் தனமான வாழ்க்கை முறையை விலக்கிவிட வேண்டும். நேர்மையான இந்தியப் பிரஜையின் வாழ்க்கைத் தரத்தை இதற்கு ஒப்பிடலாம்.

நம்மிடம் என்ன உள்ளது? என்ன இல்லை? என்பதை உணர்ந்தபடியே நாம் வாழ்வதுதான் மிகமிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும். நமது தேவைகள் யாவை என்பதனை முதலில் நாம் கணக்கெடுத்து, அவற்றை அலசிப்பார்க்க வேண்டும். தேவைகளை ஒழுங்குபடுத்திய பின்னர், அந்தத் தேவைகளை மட்டும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். அதாவது, நமது தேவைகளை அறுதியிட்டு, ஒரு எல்லைக்கோட்டை வரைந்துகொள்வது என்பதாகும்.

நமது தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகப்போக, அவற்றிற்குச் சமாதானம் (Justification & Compromise) செய்துகொள்வது சரியல்ல.

பணத்தை ஒட்டியே சிந்தித்து வாழ்பவன் கூபர் என்பவர் இறந்ததைப் போல, மடிந்துபோவான். இப்படிப்பட்ட பணத்தின் பின்னே ஓடுபவர்களால், ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்கிறான்? அவனிடம் உள்ள கடமை சீலம், மனச் சீலம் ஒழுக்கம் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் மனம்கூட அவர்களிடம் காணப்படுவது இல்லை.

இப்படிப்பட்டவர்களது மனம் களங்கப்பட்ட குற்றவாளிகளின் மனத்தைப் போல மாறிவிடுவதால், அவர்களது அறிவுக்கண் குருடாகிவிடுகிறது.

எளிய வாழ்க்கையும் உயரிய சிந்தனைகளும் என்ற கோட்பாட்டின்படி வாழவேண்டுமாயின், முதலில் நமது ஆசைகளையும் தேவைகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையால் வழங்கப்பட்ட ‘செல்வங்களையும் வளங்களையும் நாம் அனைவரும் சமமாகப் பிரித்து அனுபவித்துக்கொள்ள வேண்டும். மிகக் குறைந்த அளவு செல்வத்தை நாம் வைத்துக்கொண்டு, மற்றவற்றைப் பிறருக்கு அனுபவிக்கக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் பின்னணியில் உள்ள தத்துவம் ஆகும்.

இன்றைய நுகர்வு உலகில் நம்மால் பல விஷயங்களைத் தியாகம் செய்ய முடியாவிட்டாலும், முடிந்தவரை, நமது தேவைகளை குறைத்துக் கொள்ளும் முயற்சியில் பிராமணர்கள் இறங்கி செயல்பட வேண்டும்.

நமது உணர்வுகளையும், வாழ்க்கை முறையையும் நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கையை மட்டும், நேர்மையாக, வெளிப்படையான திறந்த மனத்துடன் பிராமணர்கள் வாழப் பழக வேண்டும்.

இப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கைமுறைதான், ஆன்மீகப் பண்பாட்டையும் என்றுமே அழியாத பாரம்பரியத்தின் வாயிலாக நிரந்தர அமைதியையும் அப்பழுக்கற்ற தனித்தன்மையுடனான மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவல்ல ஆதாரம் என்பதனை பிராமணர்கள் நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

பிராமணர்கள் அறிவால் உலகினை வெல்லப் பிறந்தவர்கள். செல்வத்தால் ஆளப் பிறந்தவர்கள் அல்ல. அந்தணர் எனப்படும் புரோகிதர்கள் (வழிகாட்டிகள்) உலக மக்களுக்கே வழிகாட்டியாக விளங்கக்கூடியவர்கள் என்பதால், தவறான வழிகாட்டல்களைத் தவிர்த்து, எளிமையாக வாழ்ந்து, தங்களது உயரிய சிந்தனைகளால் உலக மக்களை நடத்திச்செல்ல வேண்டியவர்கள் ஆவார்கள்!

எளிமையான வாழ்க்கையும் உயரிய சிந்தனையும் பிராமண தர்மமாகும் என்பதில் ஐயமில்லை.

BRAHMINS AND UPAKARMA சத்சங்க மகிமை - 2






 
    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants