- The Magazine for Brahmins
க்ருஷ்ண க்ருபயாம் குரு பிராப்தம்
- கும்பகோணம் ப்ரஹ்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள்
வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மாத்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
பகவான் விஷ்ணு மூன்று உருவங்களைத் தரித்து ஒன்றால் ஆக்கலையும் ஒன்றால் காத்தலையும், ஒன்றால் அழித்தலையும் செய்கின்றார். ஸ்ருஷ்டிக்கும்போது பிரம்மாவாகவும், பரிபாலனம் செய்து உலகத்தைக் காக்கும்போது விஷ்ணுவாகவும் சம்ஹாரம் செய்யும்போது மஹேஸ்வரனாகவும் நம்மை நல்வழிப் படுத்தும்போது ஜகத் குருவாகவும் உள்ளார் என்பது ஸ்ருதி பிரமாணம்.
ஒரு மனிதன் (ஜீவன்) ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமானால் குரு பரம்பரையில் சேரவேண்டும். கோவிலுக்குள் போவதற்கு வரிசையில் நிற்காமல் குறுக்கே போக முடியாது. வரிசையில் நின்றால் அந்த வரிசை நகர நகர நிற்பவனும் உள்ளே போய்விடுவான் குரு பரம்பரையில் சேர்ந்தவன் என்பதால் வைகுண்ட வாசல் திறந்துவிடும். ஸனாதன தர்மத்தில் முதல் குரு பகவானே ஆவான்.
அந்தர்யாமியாக இருக்கும் பகவானே முதல் குரு. ஏனெனில் ஒரு குருவினிடம் போக வேண்டும் என்கிற புத்தியைத் தருபவனே பகவான்தான். குழந்தை அழும்போதெல்லாம் தாய் ஓடிவந்து எடுப்பதுபோல், சிஷ்யன் வருந்தும்போதெல்லாம் குரு வந்து கண்ணீரைத் துடைப்பார். அறிவிலாது ஓடியோடி விழும் குழந்தையைத் தகப்பன் எடுப்பதுபோல், நல்லது, கெட்டது தெரியாமல் விழும் சீடனைக் குரு திருத்தி ஆட்கொள்வார். தகப்பனைப்போல் கண்டித்தாலும் சமயத்தில் நண்பனாகப் பேசிப் பழகி விளையாடுவார். ஆபத்து வரும்போது குரு தெய்வமாய் வந்து காப்பாற்றுவார். குழந்தையைப்போல் இருப்பார். இப்படி ஸர்வபந்துவாகவும் இருக்கும் குருநாதன் பெருமையை ஸ்மிருதிகள் சொல்வதைக் கவனிக்க வேண்டுகிறேன். நாம் பல ஜன்ம ஜன்மமாக, என்னென்ன குற்றங்கள் நமது உள்ளத்தில் படிந்து அதுவே கெட்ட வாசனையாக இருக்கிறதோ, அதை முழுவதும் நீக்கி ஞானம் உண்டாகும்படி அந்தர்யாமியான குரு செய்வார். வெளியில் ஓர் ஆசார்யனாக இருந்து பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்விக்கிறார். திருமண் இடப்பட்ட இந்த சரீரமாகிய பட்டிணம் பெருமாளுக்கு ஒரு கோவிலாகும்.
அடியேன் ராமானுஜதாஸன் என்றும் மணவாள மாமுனியின் பொன்னடியைச் சார்ந்தவன் நான் என்றும் தனது ஆசார்ய ஸம்பந்தத்தை நினைத்துக்கொண்டிருந்தால் போதுமானது. வைகுந்தம் போகிற பாதையில் ஒரு ஜீவன் வழி தெரியாமல் திகைத்து நிற்பான். அப்போது பரவாஸுதேவன் ஒரு தூதனை அனுப்பி ஜீவனைக் கைபிடித்து அழைத்துவரச் செய்வானாம். ஆசார்யனின் ஸம்பந்தத்தைப் பெற்ற மாத்திரத்தில் பெருமாளுடைய தூதன் வந்து அழைத்துப் போவது திண்ணம்.
குருநாதனுக்கு சிஷ்யனைப் பிடிப்பது ஒரு வேலை கிடையாது. பிடிபட்ட சிஷ்யனும் சரியாக இருப்பானென்று சொல்ல முடியாது. பரஸ்பரம் (ப்ரேமை) அன்பு வேண்டும். சிஷ்யனால் குருநாதனுக்கு ஏதும் உபயோகமில்லை. உபத்ரவம்கூட உண்டு. இதனால் குரு சிஷ்யனிடம் கோபப்படுவதில்லை. அவனுடைய தவறுதல்களைக்கண்டு கை விட்டு விடுவதுமில்லை. குரு கைவிட்டுவிட்டால், வேறு கதியென்ன? கருணையுடன் மெதுவாகப் பேசி இப்படி இருக்கக் கூடாதப்பா! இப்படிச் செய்ய வேண்டுமென்றும் திருத்திப் பணியைத் தொடரவைப்பார். இத்தகைய உயர்ந்த குணம் நம்மாழ்வாரிடம் இருந்ததென்று மதுரகவி ஆழ்வார் சொல்கிறார்.
பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய்கழற் கன்வையே
- மதுரகவியாழ்வார்
ஞானமும் அனுஷ்டானமுமுடைய குருவை நாடி அடைய வேண்டும். பேசுவது ஒன்று நடத்தையிலொன்று என்றிருப்பவர்களைக் குருவாகிலும் நம்ப முடியாமல் போய்விடுகின்றது. குருவின் லக்ஷ்ணம் ஸ்மிருதிகளில், சிறந்த ஞானம், ஞானத்திற்கேற்ற அனுஷ்டானம், வைராக்யம் வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது.
கல்வியால் வரும் ஞானம், அனுபூதியால் வந்த ஞானம் இரண்டும் உடையவராக இருப்பவர் குரு. வெறும் கல்வி ஸம்ச்யத்தை நீக்காது. அனுபவத்தால்தான் ஸம்சயம் (சந்தேகம்) நீங்கும். அனுபவமிருந்து சாஸ்த்ர ஞானம் இல்லாதுபோனாலும் பகவத் விஷயம் சொல்ல முடியாது. பகத்தை உடையவர் பகவான் (ஞான, பல, வீர்ய, ஐஸ்வர்ய, சக்தி, தேஜஸ்)
அனுபவமில்லாத கல்வியின் திறமையால் சொல்லும் ப்ரவசனம் மனதில் படியாது. எனவே ஞானம், அனுபவம் இரண்டும் வேண்டும். ஞானமிருந்து அனுஷ்ட்டானம் இல்லாவிட்டால் வெறும் வெளிவேஷம்தான். எனவே ஞானமும், அனுஷ்ட்டானமும், உடைய ஒரு குரு கிடைத்துவிட்டால் அது சிஷ்யனுக்குப் பெரிய பாக்கியம்தான். ஸ்ரீய: பதியான எம் பெருமான் இத்தகைய சீடனைத் தானே கூப்பிட்டு வைகுண்டம் தருவார்.
ஆசார்யனைப்போல், நமக்கும் ஞானமும் அனுஷ்டானமும் வேண்டும். ஆசார்யனைப் பார்த்துப் பார்த்து நமக்கும் அவை வந்துவிடும். பூர்வாசார்யர்கள் நம்முடைய முன்னோர்கள் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி வாழ்பவர்கள் ஸாதுக்கள். அவர்கள் நமது பூர்வாசார்யர்கள் இப்படித்தான் இருப்பது வழக்கம், இப்படித்தான் செய்வது வழக்கம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அத்தகைய ஸாதுக்களின் ஸங்கமே இருண்ட இந்த உலகத்தில் ஞான தீபம் போல் விளங்கும் நல்ல குருவிடம் கொண்டு நம்மைச் சேர்த்துவிடும்.
பெருமாளுக்கு இருப்பிடம் வைகுண்டமென்றும், வேங்கடமென்றும், மாயிருஞ்சோலை என்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள். அந்த பகவானோ எல்லா திவ்ய தேசங்களையும் விட்டு ஆர்வத்தோடு ஸ்ரீராமானுஜரின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டான். அந்த ராமானுஜரோ எனது உள்ளத்தில் பகவான் தானே வந்து புகுந்தான். நீங்காமல் நிறைந்திருக்கிறான் என்கிறார்.
இதனால், சிஷ்யனின் பெருமை நன்கு சொல்லப்படுகிறது. மேலும் மேலும் பலவிதமான கவலைகளும், துங்கங்களும் இருக்கின்ற இந்தச் சிறை வாஸத்தை எவன்தான் விரும்புவான். இதிலிருந்து விமோசனம் கிடைக்காதா என்றுதானே நினைப்பான் உண்மையான மோக்ஷ்த்தை அடைவதைத் தவிர இந்த ஜனன மரண துக்கத்திற்கு விமோசனமே கிடையாது. அதனால் ஒவ்வொருவரும் மோஷத்தை அடைவதற்காகத் தான் “வைகுண்டம் புகுவது மன்னவர் விதியே” என்று விதிக்கும் அந்த அவசியத்தை எடுத்துக் காட்டுகிறார். ஸ்வாமி நம்மாழ்வார்.
பாகவதமே, க்ருஷ்ண ஸ்வரூபம் அல்லவா, “திரோதாய ப்ரவிஷ்டோயம் என்றபடி” ஸ்ரீக்ருஷ்ணன் பாகவதத்தில் தானே இருக்கிறான். ‘ஸ்ரீமத் கதாச்ரவண கீர்த்தன சிந்தனையதி’ என்று கதாச்ரவணமும், ப்ரவசனமும் அதே சிந்தனமும் இருந்தால் கிருஷ்ணன் கிடைத்துவிடுவான். ஸ்ரீக்ருஷ்ண க்ருபைக்கு பாத்ரமானவர்களே பாகவத பாரயணம் செய்யவருவார்கள். க்ருஷ்ண க்ருபயா என்று ஸ்ரீதர ஸ்வாமி சொல்லியிருக்கிறார் அல்லவா? கிருஷ்ண க்ருபையால்தான் பாகவத் ச்ரவணம் கிடைக்கும்.
பாபங்களைப் போக்கும் மார்க்கம்
வழிகாட்டிய சில வைஷ்ணவ ஆச்சார்யர்கள்
