- The Magazine for Brahmins
வாசகன் ஒருவனின் வேண்டுகோள்
Brahmin-Today மாதப் பத்திரிகையைச் சில மாதங்களாகப் படித்து வருகிறேன். பிராம்மணன் என்ற தகுதி பிறப்பின் காரணமாக மட்டும் கிடைத்து விடுவதில்லை என்ற கருத்துடையவன் நான். ‘Brahmin-Today பத்திரிகை’ பிராம்மண ஜாதியில் பிறந்து பிராம்மணர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நலன் கருதியே நடத்தப்பட்டு வந்த போதிலும் இந்தப் பத்திரிகை பிராம்மணர் அல்லாத ஜாதியினராலும் பலமாக ஆதரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் பத்திரிகை சுயநலமின்றியும், விருப்பு வெறுப்புகளின்றியும், தனிநபர் துதி பாடாமலும், தனிநபர்களை நிந்தனை செய்யாமலும், கட்டுரைகளை உள்ளது உள்ளபடி வெளியிட்டு வருகிறது. ஆண்டுச் சந்தா ரூ.100/- என்பது போதவே போதாது. குறைந்தது 10,000 பிரதிகளாவது ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கப்பட்டால்தான்’ இந்த சிறந்த பத்திரிகையை நஷ்டமில்லாமல் நடத்த முடியும். இந்தப் பத்திரிகை நஷ்டம் காரணமாகத் தோல்வியடையக் கூடாது. இதன் வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பத்திரிகையின் வெற்றிக்காகச் சிறிது கவலைப்பட வேண்டும். ஓசியில் சிலருக்கு இந்தப் பத்திரிகையை அனுப்புவதைவிட, வாசகர் ஒவ்வொருவரும் தத்தம் நண்பர், உறவினர்களுக்கு இந்தப் பத்திரிகையைப் படிக்கக் கொடுத்து அவர்களையும் சந்தாதாரர்கள் ஆகுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாசகர்களும் குறைந்தது பத்துப் புதிய சந்தாதாரர்களைச் சேர்ப்பது தனது கடமை என்று கருதிச் செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இப்பத்திரிகை ஆசிரியர் திரு. வாசன் அவர்களது பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் இந்த வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.
S.A. ராமன், அண்ணாநகர், சென்னை
